தலிபான்கள் பிடியிலிருந்த 2 சீக்கியர்களை மீட்டது பாக். ராணுவம்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010, 11:00 [IST]
பெஷாவர்: தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த 2 சீக்கியர்களை பாகிஸ்தான் ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கைபர் பழங்குடியினப் பகுதியில் இவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பாகிஸ்தான் படையினர் மீட்டுள்ளனர்.

இந்த சீக்கியர்கள் அரக்சாய் பகுதியிலிருந்து கடத்தப்பட்டிருந்தனர். அரக்சாய் மற்றும் கைபர் இடையே உள்ள ஒரு பகுதியில் இவர்களை தலிபான்கள் சிறை வைத்திருந்த தகவல் உளவுப் படையினருக்குக் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தலிபான்கள் பிடியில் இருந்த சுர்ஜீத் சிங், குர்வீந்தர் சிங் ஆகியோரை மீட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புப் படை தகவல்கள் கூறுகின்றன. ஆனால் எத்தனை பேர் என்ற தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை.

குர்வீந்தர் சிங்குக்கு 16 வயதே ஆகிறது. இவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதேசமயம், சுர்ஜீத் சிங்குக்கு முதுகில் காயம் இருந்ததால் அவரை ராணுவ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

முன்னதாக வீடு திரும்பிய குர்வீந்தர் சிங் ஊர்வலமாக பாதுகாப்புப் படையினரால் அழைத்து வரப்பட்டார். அவருக்கு நீல நிற டர்பனை அணிவித்து மாலை அணிவித்து பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்றனர். வழியெங்கும் மலர் தூவி குர்வீந்தரை மக்கள் வரவேற்றனர்.

பின்னர் குருத்வாராவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குர்வீந்தரை சீக்கிய மக்கள் பெரும் திரளாக வந்து வாழ்த்தினர்.

40 நாட்களுக்கு முன்பு குர்வீந்தர், சுர்ஜீத் சிங் ஆகியோர் ஜஸ்பால் சிங் என்பவருடன் சேர்த்துக் கடத்தப்பட்டனர். இவர்களில் ஜஸ்பாலை தலிபான்கள் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டனர். ஜஸ்பாலின் உடல் பிப்ரவரி 21ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

அதே நாளில் மஹல் சிங் என்பவரின் தலை துண்டிக்கப்பட்ட உடலும் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
  Read:  In English 
மேலும் இந்த சம்பவங்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ள சீக்கியர்களை மீட்க ராணுவத்திற்கு அதிபர் சர்தாரி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே, ராபின் சிங் என்ற இந்துவும் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க ரூ. 1 கோடி தர வேண்டும் என தலிபான்கள் கெடு விதித்துள்ளனர். அவரையும் மீட்க சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.

User Comments
நாதியற்ற tamilan 02 Mar 2010 02:35 pm
அதெப்டிடா சீக்கியனுக்கு ஒரு பிரச்சினைன்னா மட்டும் காப்பாத்திடறானுங்க .......
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets