விலைவாசி உயர்வுப் பிரச்சினை- லோக்சபாவில் அமளி- இடதுசாரிகள் வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010, 14:33 [IST]
டெல்லி: விலைவாசி உயர்வுப் பிரச்சினையைத் தீர்க்க அரசு போதிய பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி இடதுசாரி உறுப்பினர்கள் இன்று லோக்சபாவில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பூஜ்ய நேரத்தின்போது இந்தப் பிரச்சினையை சிபிஐ உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா, சிபிஎம் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சாரியா ஆகியோர் எழுப்பினர்.

அவர்கள் கூறுகையில், அரசு விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விலைவாசியைக் குறைக்க அரசு அனைத்து வழிகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜக, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.

சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க வேண்டும். அரசுக்கு இதுதொடர்பாக சபாநாயகர் மீரா குமார் நெருக்குதல் தர வேண்டும் என ஆச்சாரியா கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து ஒரு பதிலும் வரவில்லை.
  Read:  In English 
இதனால் கோபமடைந்த இடதுசாரி உறுப்பினர்கள், அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இடையில் விலைவாசி உயர்வுப் பிரச்சினையை கிட்டத்தட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் மறந்திருந்தன. மகளிர் மசோதா மீது அவை கவனம் செலுத்தி வந்தன. தற்போது இடதுசாரிகள் மீண்டும் விலைவாசி உயர்வுப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets