சமாஜ்வாடியிலிருந்து விரட்டப்பட்ட அமர் சிங் புதுக் கட்சி தொடங்குகிறார்
மிர்ஸாபூர் (உ.பி.): சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து விரட்டப்பட்ட அமர்சிங் விரைவில் புதிய கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.
மிர்ஸாபூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமர்சிங் பேசுகையில்,
என்மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள உத்தரப் பிரதேச மக்களுக்கு நன்மை செய்வதற்காக விரைவில் புதிய கட்சி தொடங்குவேன். இது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
டெல்லியில் வரும் 28-ம் தேதி ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசிக்க இருக்கிறேன். அதன் பின் புதிய கட்சி குறித்து அறிவிப்பேன். பிற்படுத்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களும் என்னை நிச்சயமாக ஆதரிப்பார்கள்.
இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயப்பிரதா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இவரும், அமர்சிங்கும் ஒரே நாளில் கட்சியை விட்டுத் தூக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
369 முறை ஓசி பயணம் செய்த லாலு...
இதற்கிடையே, ரயில்வே அமைச்சராக இருந்தபோது லாலு பிரசாத் யாதவ், சொகுசு ரயில் பெட்டிகளில் மொத்தம் 369 முறை பயணம் செய்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.
லாலு பயணம் செய்த பெட்டிகளில், சாப்பிடும் அறை, படுக்கையறை, அனைத்து வசதிகளும் அடங்கிய சமையலறை, கழிப்பறைகள் என சகல வசதிகளும் படம் உள்ளடக்கியதாகும்.
ரயில்வே அமைச்சராக 2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2008-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வரை லாலு பதவி வகித்து வந்தார். தனது பதவிக்காலத்தில் மொத்தம் 369 முறை பயணம் செய்துள்ளார்.
டெல்லியிலிருந்து சொந்த மாநிலமான பீகாருக்குப் போவதற்குத்தான் சொகுசுப் பெட்டிகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.
ஜம்மு, உதய்ப்பூர், கோரக்பூர், சகார்ஸா, கயா, லூதியானா, வாரனாசி உள்ளிட்ட நகரங்களுக்கும் அதிக அளவில் போயு்ளார்.
பல்வேறு புனித தலங்களுக்கும் சொகுசு பெட்டிகளில் லாலு சென்று வந்துள்ளார். ஹரித்வார், அமிர்தசரஸ், திருப்பதி கோயில்களுக்கு சொகுசு ரயில் பெட்டியில் பலமுறை போயுள்ளார்.
கன்னியாகுமரி, எர்ணாகுளம், சேலம் உள்ளிட்ட தென்மாநிலப் பகுதிகளுக்கு வரும் போதும் லாலு பிரசாத் சொகுசு ரயில் பெட்டிகளை தேர்ந்தெடுத்துள்ளார்.
ரயில்வே இணை அமைச்சர், அமைச்சக மூத்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளும் பயணங்களின் போது இந்த சொகுசு ரயில் பெட்டிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி உள்ளது.
இருப்பினும் தற்போதைய ரயில்வே அமைச்சரான மமதா பானர்ஜி இதுவரை இந்த சொகுசு ரயில்பெட்டி வசதியை பயன்படுத்தவில்லையாம்.
சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு இந்தப் பதிலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது.