கொடைக்கானல் தொழிலதிபரை கொல்ல சதி: கூலிப்படையுடன் சினிமா உதவி இயக்குனர் கைது
திருச்சி: கொடைக்கானல் தொழிலதிபரை கொல்ல சதித் திட்டம் தீட்டிய, ரவுடி முட்டை ரவியின் கூட்டாளியான சினிமா உதவி இயக்குனர் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்த போது, அதில் இருந்த ஆறு பேர், முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் , மேலும் விசாரணை நடத்திய போது, அதில், திருச்சி மதன்குமார் (28), ஜோதி ராஜா(28), தஞ்சை தட்சிணாமூர்த்தி (25), மணிகண்டன்(29), அரவிந்தன்(34), கார் டிரைவர் தினகர் என்பதும் தெரிய வந்ததது.
இவர்கள் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி முட்டை ரவியின் கூட்டாளிகள் என்றும் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் கொடைக்கானல் தொழிலதிபர் மணிவேல் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், திண்டுக்கலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சினிமா உதவி இயக்குனராக உள்ளார்.
திண்டுக்கலைச் சேர்ந்த வினோத் என்பவர் இயக்கும், "பாரதிபுரம்' என்ற படத்தில் பணியாற்றினார். இவர் வக்கீல் சுதாகர் கொலை வழக்கில் தொடர்புடையராவார்.
இந்த சதித்திட்டத்தில் மூளையாகச் செயல்பட்டது, மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ரவுடி குணா. அவனையும், தஞ்சையை சேர்ந்த பெரிய தட்சிணா (எ) தட்சிணாமூர்த்தியையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்