தொடர்ந்து முறைகேடுகளை செய்து வருகிறது திமுக: டாக்டர் ராமதாஸ் புகார்
சென்னையில் செய்தியாளர்களை ராமதாஸும், பென்னாகரம் தொகுதி பாமக தேர்தல் பணிக்குழுத் தலைவருமான வேல்முருகன் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது ராமதாஸ் கூறுகையில், பென்னாகரத்தில் ஒரு வாக்காளருக்கு ரூ.1000 வீதம் திமுகவினர் பணம் வினியோகம் செய்து வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.20,000 வீதம் வழங்கப்படுகிறது. வேட்டி, சேலை மற்றும் ஏராளமான பொருட்களை வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் கொண்டு சென்ற வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை லாரியோடு பிடித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைத்தோம்.
அப்பொருட்கள் யாவும் இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளன. ஆனால் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு இதுவரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் வினியோகிக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் பாமகவினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
பாமகவினர் மீது நடத்தப்பட்ட வெவ்வேறு 11 கொடூர தாக்குதல்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம், திமுகவினரின் தேர்தல் முறைகேடுகள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் ஏராளமான புகார்கள் அளித்துள்ளோம். ஆனால் அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், பாமக தலைவர்கள் செல்லும் வாகனங்களை மட்டும் சோதனை என்ற பெயரில் போலீஸார் நிறுத்தி, தினமும் இடையூறு செய்கின்றனர். ஒரு கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச மரியாதை கூட வழங்க மறுக்கிறார்கள்.
விரும்பியவர்களுக்கு மக்கள் வாக்களிக்கலாம் என்ற நிலையை மாற்றி, பணம் கொடுப்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க திமுகவினர் முயல்கின்றனர். எனினும் இதையெல்லாம் மீறி பென்னாகரத்தில் பாமக வெற்றி பெறும் என்றார்.