குஜராத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி கைது
அகமதாபாத்: குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவரைப் பிடித்துள்ளனர்.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நடந்த ரெய்டில் பஷீர் பாபா என்பவர் சிக்கினார். இவர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். அகமதாபாத்தைச் சேர்ந்த என்ஜிஓ அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறுவதற்காக அகமதாபாத் வந்ததாக பஷீர் பாபா கூறியுள்ளார்.
இதுகுறித்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் அஜய் டோமர் கூறுகையில், என்ஜிஓ அமைப்புடன் இணைந்து மருத்துவ முகாம்கள் தொடர்பான பயிற்சிகளுக்காக வந்ததாக கூறினார் பஷீர் பாபா. ஆனால் அதற்குப் பதில், சந்தேகத்திற்கிடமான வகையில் அவர் செயல்பட்டு வந்தார்.
பல்வேறு நபர்களை அவர் சந்தித்து புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். போனிலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இமெயில்களையும் பெருமளவில் அனுப்பி வந்துள்ளார் என்றார்.
இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் உஷார் நிலையில் இருக்குமாறு அவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நேற்று காலைதான் மும்பையில் ஓஎன்ஜிசி உள்ளிட்ட முக்கிய நிலைகளைத் தகர்க்கும் நோக்கில் வந்த 2 பேரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்தனர் என்பது குறிப்பிடத்த்கது.