சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன், மங்கூஸ் பேட்டுடன் ஆடி வருகிறார்.கீரிக்குத்தான் மங்கூஸ் என்று பெயர். உண்மையில் மராத்தி மொழியிலிருந்துதான் இந்த மங்கூஸ் என்ற வார்த்தையே வந்தது. தமிழகத்தில் கீரியை கீரிப்பிள்ளை என்றும் அழைப்பார்கள்.கீரி மாதிரி படு வேகமாக இருக்கும் பேட் என்பதால், கீரியின் பெயரையே இந்த பேட்டுக்கும் வைத்து விட்டனர். இந்த மட்டையை அவர் வியாழக்கிழமை முறைப்படி சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்தார். மங்கூஸ் பேட், நீண்ட பிடிமானமும், சிறிய பேட்டிங் பகுதியையும் கொண்டதாகும். அதேசமயம், தற்போது உள்ள இதர பேட்களை விட சிறந்த முறையில் பந்துகளை பெற்று அடிக்கக் கூடியதாக மங்கூஸ் ரக பேட்கள் உள்ளன.இதுதொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது எப்படி இந்தப் பேட்டை வைத்து அழகாக பேட் செய்யலாம் என்பதையும் சொல்லிக் காட்டினார் ஹெய்டன். அழர் கூறுகையில், இந்த பேட் மிகவும் அதி விரைவாக பந்துகளை அடிக்க உதவும். மிகவும் சக்தி வாய்ந்த ஷாட்களை இதன் மூலம் அடிக்கலாம். குறிப்பாக டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இது மிகப் பொருத்தமான பேட்.இந்த பேட்டைத் தொடும் ஒவ்வொரு பந்தும் பொறி பறக்கப் பறப்பது உறுதி. பேட்டில் படும் பந்து நிச்சயம் பவுண்டரியைப் பார்க்காமல் ஓயாது.இந்த பேட் குறித்து ஆரம்பத்தில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் 3 பால்களை அடித்துப் பார்த்த பிறகுதான் இதன் மகாத்மியம் தெரிய வந்தது. இந்த பேட் என்னைக் கவர்ந்து விட்டது என்றார்.இந்த ஐபிஎல் தொடரில் ஹெய்டன் தவிர, சைமண்ட்ஸ், மேற்கு இந்திய வீரர் திவாயன் ஸ்மித் ஆகியோரும் மங்கூஸ் பேட்டை பயன்படுத்துகிறார்களாம்.இந்த பேட்டைப் பயன்படுத்தலாம் என்று மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் அங்கீகரித்துள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இதைப் பயன்படுத்தவும் அது அனுமதி அளித்துள்ளது.மங்கூஸ் பேட்டின் ஹேன்டிலின் நீளம் வழக்கமான பேட்டை விட 43 சதவீதம் கூடுதல் நீளம் கொண்டது. அதேபோல பந்தை அடிக்கும் பிளேட் பகுதி 33 சதவீதம் குறுகியது.தற்போது இந்தியாவில் 100 மங்கூஸ் பேட்கள் களம் இறக்கப்பட்டுள்ளனவாம். ஒரு பேட்டின் விலை ரூ. 17,000 முதல் ரூ. 23,000 வரை உள்ளது.மங்கூஸ் பேட்டை சச்சின் அல்லது ஷேவாக் விரைவில் வாங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதன் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.