லோக்சபா தொகுதிகளை அதிகரித்து, இரட்டை உறுப்பினர் முறையை அமல்படுத்த பாஸ்வான் யோசனை!
டெல்லி: லோசக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். மேலும், இரட்டை உறுப்பினர் முறையைக் கொண்டு வர வேண்டும். இதைச் செய்தால் லோக்சபாவில் மகளிர் மசோதாவை எளிதாக நிறைவேற்றலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய தலித் முன்னணி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பாஸ்வான் பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் சுழற்சி முறையி் பிரதிநிதித்துவம் என்பது சரிப்பட்டு வராது. ஒவ்வொரு தேர்தலுக்கும் தனித் தொகுதிகளை மாற்றுவதால், ஜனநாயகத்தின் அடிப்படையே தகர்ந்து போய், பலவீனமாகி விடும்.
இந்த முறையல், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் தங்களது தொகுதி நலனில் அக்கறை செலுத்தவும் முடியாது. பிற விஷயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். இந்தக் குறையை நீக்கி விட்டுத்தான் லோக்சபாவில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
ராஜ்யசபாவில் மகளிர் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி சஸ்பென்ட் ஆகியுள்ள எனது கட்சி எம்.பி சபீர் அலி மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களின் ஆதங்கத்தைக் காது கொடுத்துக் கேட்க யாருமே இல்லை. இதனால்தான் அன்றைய தினம் எம்.பிக்கள் ராஜ்யசபா தலைவரின் மைக்கைப் பறிக்க முயற்சித்தனர்.
தற்போதைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக 181 தொகுதிகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மகளிருக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். அதேசமயம், ஆண்களுக்கும் பாதிப்பு வராது.
மேலும் திட்டமிடப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், முஸ்லீம்களுக்கு நியாயமான ஒதுக்கீடு தரப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் இரட்டை உறுப்பினர் பதவி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஒரு தொகுதியிலிருந்து ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
1951ல் நடந்த லோக்சபா தேர்தல் இரட்டை உறுப்பினர் முறைப்படிதான் நடந்தது என்றார் பாஸ்வான்.