மெரினா கடற்கரையில் பள்ளி மாணவர்கள் வினோத போதை ஏற்றுவதாக புகார்
சென்னை: மெரினா கடற்கரையில் பள்ளி மாணவர்கள் பலர் நூதனமான போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் தங்களது பள்ளி வகுப்புகளை 'கட்' அடித்துவிட்டு, சீருடையிலேயே மெரினாவுக்கு வருகின்றனர்.
அவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளில் சிறு துளையிட்டு ஒரு பிரத்தியேக 'திரவ'த்தை (லோஷன்) தேவையான அளவு ஊசி மூலம் செலுத்தி தண்ணீர் பாக்கெட்டை நன்றாக குலுக்கி, நுரை வந்த பின் குடித்து போதையில் திளைப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் சிலர் தனியாக கடற்கரையில் சுற்றுவதும், அவர்களை சமூக விரோதிகள் கண்காணித்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
மெரீனா கடற்கரைக்கு மக்கள் கூட்டம் மாலையில் வரும் முன்பாக இவர்கள் வெளியேறுகின்றனர். இந்த விநோத போதை பழக்கத்தால், கட்டுப்பாடற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக பொது நல விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காவல்துறை அதிகாரிகள் இதுபற்றி உண்மை நிலவரத்தை கண்டறிந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.