தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு
கொழும்பு: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு கூட்டமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தனி ஈழக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இனி காந்திய வழியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் அது கூறியுள்ளது.
தமிழ் மக்களின் ஒரே கோரிக்கையாக தனி ஈழம் இலங்கையில் பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்ட இந்தக் கோரிக்கையை கைவிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டது.
அதில்,
கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி இணைந்த ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 1987-ல் ஏற்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் அப்பகுதிகளுக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் கட்சி போராடும். இது தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அரசுடன் பேச்சு நடத்தப்படும்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை பிரித்ததன் மூலம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை அரசு மீறிவிட்டது. இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுத்து வந்துள்ளன.
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் பலமுறை கவலை தெரிவித்தும் இலங்கை அரசு அதனை பொருட்படுத்தவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறி தமிழர்களுக்கு எதிராக பலமுறை மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களும்- முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைதி வழியில் ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட காந்திய வழிகளில் இனி நடை போடப் போவதாகவும் அது கூறியுள்ளது.
சிவாஜிலிங்கத்துக்கு சிக்கல்...
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளையும் இலங்கை அரசு விடுவித்த பின்னர் அவரை கனடாவில் உள்ள மகளிடம் ஒப்படைப்பதற்காக சிவாஜி லிங்கம் மலேசியாவுக்கு அழைத்து சென்றார்.
பார்வதி அம்மாளை வெளிநாடு செல்ல அப்போது அனுமதி அளித்த இலங்கை அரசு இப்போது அவரை அழைத்து சென்ற சிவாஜிலிங்கத்திடம் விசாரணை நடத்தி வருகிறதாம்
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நாட்டின் எந்த சட்ட திட்டங்களையும் மீறாத வகையிலேயே நான் பிரபாகரனின் தாயாரை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றேன். இலங்கை அரசு அவருக்கு அனைத்து நாடுகளுக்குமான பயண சான்றிதழை எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியது. ஆனால் இன்று பிரபாகரனின் தாயாரை ஏன் அழைத்துச் சென்றீர்கள் என்றும், ஏன் அனுமதி பெறப்படவில்லை என்றும் விசாரிக்கின்றனர்.
பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்தும் விசாரிக்கப்பட்டேன். இதன்பின்னர் தற்போது தொலைபேசி மூலமாக தொடர்ந்து என்னை விசாரித்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
பிரபாகரனின் தந்தையின் மரணத்தின் பின்னர் அவரது தாயாரைத் தொடர்ந்து இலங்கையிலேயே பராமரிப்பதற்கு அவருக்கு நெருக்கமான உறவினர்கள் எவருமில்லை. அத்துடன் அவர் கடந்த பத்து வருட காலமாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக அவரை கனடாவில் உள்ள அவரது மகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்தேன்.
இந்த மாதம் 2-ந்தேதி பிரபாகரனின் தாயாரை வடக்கிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவரை அழைத்து வருவதில் கூட எந்த பிரச்சினையும் இருக்க வில்லை. கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த அவரை 5-ந்தேதி இரவு சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் இலங்கை திரும்பினேன்.
அதன்பின்னர் அவர் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினி ராஜேந்திரன் மலேசியாவுக்கு வந்து தனது தாயாரை பொறுப்பேற்றுள்ளார்.
பிரபாகரனின் தந்தையின் பூர்வீகம் மலேசியா என்பதால் அவரது உறவினர்களும் அங்கு இருக்கலாம். பிரபாகரனின் ஏனைய சகோதர, சகோதரிகளும் தற்போது மலேசியா வந்துள்ளனர்.
ஆனால் அவரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதில் தற்போது சற்றுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் கனடாவில் குடியேறுவதற்கான அனுமதியை அந்த நாட்டு அரசாங்கம் நிராகரிக்கவும் முடியும்.
இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி சென்னையில் உள்ள அவரது இன்னொரு மகளான ஜெகதீஸ்வரியுடன் வாழ வைக்க முடியும்.
அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதிலும் பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் இலங்கைக்கே அழைத்து வரவேண்டியதுதான் என்றார்.