மனைவியை கொன்ற கணவன் நண்பருடன் தற்கொலை- ஓரின சேர்க்கை காரணமா?
மதுரை: கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர், நண்பருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவருக்கும், நண்பருக்கும் இடையே 'ஓரினச் சேர்க்கை' உறவு இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கும் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை தத்தனேரி ரயில்வேகேட் அருகே நேற்று அதிகாலை 2 வாலிபர்கள் ரயிலில் அடிபட்ட நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர்களில் ஒருவர் அணிந்து இருந்த சட்டை காலரில் தத்தனேரியை சேர்ந்த ஒரு டெய்லரின் முகவரி இருந்தது.
இதனால் அவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மதுரை செல்லூர் கீழ பாக்கியநாதபுரம் பனைமேட்டு தெருவில் நேற்று காலை ஒரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உமாமகேசுவரி (20) என்ற பெண் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
அவர் தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டிருப்பதும் தெரியவந்தது.
அந்த நேரத்தில் அவரது கணவர் லட்சுமணன் (22) அங்கு இல்லை. அவரை பற்றி விசாரித்தபோது, லட்சுமணன் தனது நண்பர் போஸ்(23) என்பவருடன் வெளியே சென்றதாகவும், அப்போது இருவரையும் காணவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனை அடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கினார். அப்போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.
லட்சுமணனும், உமாமகேசுவரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். லட்சுமணனுக்கும், போசுக்கும் இடையே உள்ள நெருங்கிய பழக்கம் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த உமாமகேசுவரிக்கு வெறுப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக லட்சுமணனும், அவரது நண்பர் போசும் சேர்ந்து உமாமகேசுவரியை கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உமாமகேசுவரியை கொன்ற பின் அவரது பிணத்தை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நம்ப வைக்கலாம் என்று நினைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் நேற்று அதிகாலை மதுரை-திண்டுக்கல் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து அவர்கள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
லட்சுமணனுக்கும் போசுக்கும் இடையே ஓரினசேர்க்கை இருந்து இருக்கலாம் என்றும் அதுவே அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.