மகளிர் மசோதா- இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி: முலாயம்
லக்னோ: 'நாட்டில் ஜனநாயக நடைமுறைகளை உடைத்தெறியவும், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான சதித் திட்டத்தை நிறைவேற்றவுமே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரப்படுகிறது' என்று சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டிளித்த போது முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,
'நாட்டில் ஜனநாயக நடைமுறைகளை உடைத்தெறியவும், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான சதித் திட்டத்தை நிறைவேற்றவுமே காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து எதிர்க்கும். எங்களைப் பொறுத்தவரை இது, வாழ்வா சாவா என்கிற போராட்டம்.
இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றி விட்டாலும், தற்போது காங்கிரஸ் எம்பிக்களே இதை எதிர்க்கின்றனர். அதோடு பாஜக எம்பிக்களும் தற்போது இந்த மசோதாவுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
காங்கிரசின் முகத்திரையை விரைவில் கிழிப்போம். இந்த மசோதாவின் மூலம் காங்கிரஸ் தீட்டியுள்ள சதி திட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எடுத்துச் சொல்வோம்.
முஸ்லிம் சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவேண்டு்ம் என்ற உள்நோக்கத்துடன் காங்கிரஸ் இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த மசோதாவின் மூலம் ஆண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். ஆண்களுக்கு அதிகாரத்தை குறைத்து இந்தியாவை நிலைகுலையச் செய்ய வெளிநாட்டு தீய சக்திகள் திட்டமிடுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான இந்த சர்வதேச சதியில் காங்கிரஸும் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது' என்றார்.