லோக்சபாவில் ஏப்ரலில் தான் மகளிர் மசோதா தாக்கல்-மொய்லி!
சிக்பல்லாபூர் (கர்நாடகா): லோக்சபாவில் மகளி்ர் இட ஒதுக்கீடு மசோதா ஏப்ரல் 12ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் கூடும்போது தாக்கல் செய்யப்படும் என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம் சிக்கபெல்லாபூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா எதிர்பார்க்கப்பட்டபடி மார்ச் 15 அல்லது 16ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட மாட்டாது.
முதலில் நிதி மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரமாக உள்ளது. அதேபோல அணு சக்தி மசோதாவையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதன் பின்னர்தான் மகளிர் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என்றார் மொய்லி.
ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்பு கிளப்பிய சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவற்றை, லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யும்போது அலட்சியப்படுத்த விரும்பவில்லை காங்கிரஸ். மேலும், பாஜகவிலும் தற்போது மகளிர் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந் நிலையில் ரிஸ்க் எடுக்காமல், அனைத்துத் தரப்பினரையும் ஓரணியில் திரட்ட அவகாசம் எடுத்துக் கொள்ள அரசு விரும்புகிறது.
தற்போது எதிர்ப்பாக உள்ள அனைத்துத் தலைவர்களுடனும் விரைவில் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தவுள்ளார் என்று தெரிகிறது.