வேலை செய்யாத தமிழக பாஜக நிர்வாகிகள்-கட்காரி ஆவேசம்
சென்னை: வேலை செய்ய ஆர்வமில்லாதவர்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகளிடம் அக் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
பாஜக தலைவர் நிதின் கட்காரி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவின் பலம் குறித்து நிர்வாகிகளை கட்காரி கடிந்து கொண்டார்.
அவர் பேசுகையில், பாஜக குறித்து மக்களிடம் உள்ள தவறான எண்ணங்களை போக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். நீஙகள் மக்களுடன் நெருங்கிப் பழக வேண்டும்..
தமிழகத்தில் பாஜக மிக பலவீனமாக உள்ளது. கொள்கை பற்றுடன் வேலை செய்யும் ஊழியர்கள் குறைவாக இருப்பது தான் இதற்குக் காரணம். எனவே கட்சிக்காக உணர்வுப்பூர்வமாக வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொறுப்புகளை வழங்க வேண்டும்.
வேலை செய்ய ஆர்வமில்லாதவர்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.
கூட்டணி பற்றி சிந்திக்காமல் கட்சியின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டந்தோறும் பயிற்சி முகாம்கள், தொண்டர்களின் வீடுகளில் தங்குதல், சமூகசேவை ஆகியவற்றில் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில துணை தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர்கள் மோகன்ராஜுலு, ரமேஷ், செயலாளர் ஜானகி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம், முன்னாள் மாநில தலைவர் கே.என். லட்சுமணன், லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்காரி பேசுகையில்,
நாக்பூரில் போஸ்டர் ஒட்டுகிற சாதாரண தொண்டனாக இருந்த நான் இன்று கட்சித் தலைவராக உயர்ந்திருக்கிறேன்.அதுதான் பாஜக கட்சி. நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. அதில் 50க்கும் மேற்பட்ட கட்சிகள்தான் பெரிய கட்சிகள். ஐந்து கட்சிகள் மட்டுமே நாடு முழுவதும் செயல்படுகின்றனன.
நாடு முழுவதும் மின்பற்றாக்குறை நிலவுகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஐந்தே ஆண்டுகளில் முன்பே அறிவித்தது போல நதிகளை தேசியமயமாக்கி, தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்போம். கங்கையையும், காவிரியையும் இணைப்பதன் மூலம் தமிழகத்திற்கு 4000 டி.எம்.சி. தண்ணீர் தருவோம்.
பாஜக தனி மனித கட்சி அல்ல. சமூக, பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவதே எங்கள் கட்சியின் நோக்கம். பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 15 தமிழர்கள், பாஜக மூலம் வெற்றி பெற்றுள்ளனர். எனவே வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும் பாஜக போட்டியிட்டு, வெற்றி பெற முடியும் என்றார்.