Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மாவோயிஸ்டுகளை ஒடுக்க விமானப்படை தயார்: பி.வி.நாயர்

Published: Tuesday, April 13, 2010, 10:28 [IST]

அலகாபாத்: மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக அடக்கி ஒடுக்க இந்திய விமானப் படை தயார். ஆனால் அதை மத்திய அரசு தான் முடிவு செய்யவேண்டும் என்று விமானப்படை தளபதி பி.வி.நாயக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் நக்சல் விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

ஜார்க்கண்ட், ஒரிசா, பீகார், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சல்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நக்சல் வன்முறைகளை முற்றிலுமாக ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உறுதியேற்றுள்ளார். மாநில போலீசாருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், கடந்த வாரம் தாண்டேவாடாவில் 70க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்களை பலிவாங்கிய நக்சல்களின் கொடூரத் தாக்குதல் மத்திய அரசை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

எனவே, நக்சல் விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், அடர்ந்த வனப்பகுதிகளில் லாவகமாக இருந்துகொண்டு அவர்கள் தாக்குதல் நடத்துவதை கவனத்தில் கொண்டும், ராணுவத்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்தது.

ஆனால், 'நக்சல்களும் இந்தியாவின் குடிமக்கள் தான். அதோடு உள்நாட்டிலேயே ராணுவத் தாக்குதல் நடத்துவது ஏற்புடையதாக இருக்காது' என்று சில நாட்களுக்கு முன்பு விமானப்படை தளபதி பி.வி.நாயக் தெரிவித்தார்.

மேலும், விமானத் தாக்குதல் நடத்தும் போது, அது சக்திவாய்ந்ததாக இருக்கும். அதனால், அப்பாவி மக்களுக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் மற்றும் இதர சேதாரங்கள் குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த அடிப்படையில், ஆயுதங்களை பிரயோகிக்க படை வீரர்களுக்கு பிரத்தியேக பயிற்சிகள் தேவைப்படும் என்றும் பி.வி.நாயக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று அலகாபாத்தில் நிருபர்களிடம் பேசிய பி.வி.நாயர், 'மத்திய அரசு முடிவெடுத்து உத்தரவிட்டால், நக்சல்களை ஒடுக்க விமானப் படை தயார் நிலையில் உள்ளது' என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 'நக்சல் மீது விமானப் படை தாக்குதல் நடத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்கவேண்டும்.

அப்படி முடிவெடுத்தால், பெரும் சேதாரங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான வியூகமும் அமைக்கப்பட வேண்டும்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக படையை பயன்படுத்தக் கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

250 கிலோ வெடிகுண்டை ஒரு இடத்தில் வீசினால், குறைத்தபட்சம் 800 மீட்டர் பரப்பில் பெருத்த சேதாரம் உண்டாகும். இதனால் நக்சல் அல்லாதவர்களுக்கு எந்தவித கேடும் ஏற்பட்டுவிடக் கூடாது.

படையை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது, பாதிப்புகளை தடுப்பதற்கான வியூகம் அமைக்கப்பட வேண்டும்' என்றார்.

அமைச்சர்களுக்கு தடை:

இதற்கிடையே, மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கையால் மார்க்சிஸ்டு கட்சி மீண்டும் வலுப்பெறும் என மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

அதற்கு, மற்றொரு மத்திய மந்திரியான சுபோத்காந்த் சகாய் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு, முக்கிய பதவிகளில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை கூறிவந்தனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தவிர வேறு யாரும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினை குறித்து பேசக் கூடாது' என மத்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய அமைச்சரவை செயலாளர் எம்.கே.சந்திர சேகரன் நேற்று வெளியிட்டார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST