லலித் மோடி அலுவலகத்திலிருந்து ரகசியமாக வெளியேறிய பெண் விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள்!
பெங்களூர்: மும்பையில் உள்ள லலித் மோடியின் அலுவலகத்திலிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், கோப்புகளுடன் வெளியேறிய பெண், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் என்று தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகம் மற்றும் லலித் மோடியின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தினர். இதில் மோடியின் அலுவலகங்ளில் ஒன்று சீசன்ஸ் ஹோட்டலின் 33வது மாடியில் உள்ளது.
அங்கு வருமான வரித்துறையினர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு பெண் லேப்டாப் மற்றும் கோப்புகளுடன் வெளியேறியது ஹோட்டல் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டது. யார் அந்த மர்மப் பெண், லேப்டாப், கோப்புகளுடன் அவர் சென்றது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து மோடியிடம் கேட்டபோது, அவர் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை வருமான வரித்துறையினருக்காக லேப்டாப் மற்றும் கோப்புகளை அவர் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்தப் பெண் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் லைலா மகமூத். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் ஆவார்.
இவரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
லைலா தனது வளர்ப்பு மகள், அவர் மோடி அலுவலகத்தில் பணியாற்றுவதாக மல்லையாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது வளர்ப்பு மகள் லைலா மகமூத், லலித் மோடி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். ஆனால் அவர் லேப்டாப், கோப்புகளுடன் சென்றது குறித்து எனக்குத் தெரியாது. இதுகுறித்து மோடியை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, வருமான வரித்துறையிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக மோடி தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.
--