சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: இத்தாலியில் தமிழக பாதிரியார் கைது – வீட்டுக் காவலில் வைப்பு
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட். இத்தாலியின் ரோம் நகரில் பாதிரியாராக உள்ளார். 40 வயதான இவர் ரோம் அருகே உள்ள டெரமா என்ற நகரில் வசித்து வருகிறார்.
இவர் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டை டேவிட் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து விரைவில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என டேவிட்டின் வக்கீல் கியோவன்னி ஜெபியா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெபியா கூறுகையில், டெரமா நகரில் உள்ள தனது வீட்டில் டேவிட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள கான்வென்ட்டில் வார இறுதி பிரார்த்தனையில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. தற்போது தனது வீட்டில் பிரார்த்தனை செய்து கழித்து வருகிறார் டேவிட் என்றார் ஜெபியா.
கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டேவிட்டின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமி டேவிட் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சான்டா கிளாஸ் பொம்மையைப் பரிசாக அளித்த டேவிட், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து அக்கிரமம் செய்துள்ளார்.
அவரிடமிருந்து மீண்டு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதைத் தெரிவிக்கவே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் கைது செய்யப்பட்டார்.
தற்போது தனது குற்றத்தை அவர் ஒத்துக் கொண்டதால் அவர் மீதான விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
1987ம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டவர் டேவிட். அதன் பின்னர் அவர் இத்தாலிக்கு வந்து அங்கு செயல்படத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.