எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம்

திங்கள்கிழமை, மே 17, 2010, 9:15 [IST]
சென்னை: புகழ் பெற்ற எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் தகனம் இன்று நடைபெறுகிறது.

62 வயதாகும் அனுராதா ரமணன், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய, முற்போக்குச் சிந்தனைகளுடன் கூடிய எழுத்தைத் தந்தவர் அனுராதா.

சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை படைத்துள்ளார்.

சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகியவை திரைப்படங்களாக உருவெடுத்து வெற்றியும் பெற்றன.

பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்டவை தொலைக்காட்சி நாடகங்களாக மாறி புகழ் பெற்றவையாகும்.

1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றார்.

அனுராதா ரமணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனை செய்து வந்தார்.

கடந்த 5ம் தேதியும் வழக்கமான பரிசோதனைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று உடல் நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மாலை நாலரை மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார்.

அதன் பின்னர் அனுராதாவின் உடல் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட அனுராதாவுக்கு சுபா, சுதா என இரு மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர்.

இன்று மாலை வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் கிளம்பி, மாலை நாலரை மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

அனுராதா ரமணனின் மரணத்திற்கு எழுத்துலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி சங்கராச்சாரியார்...:

சில ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தொடர்பாக அனுராதா ரமணண் வெளியிட்ட பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சங்கராச்சாரியாருக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார் அனுராதா.
Posted by:
User Comments
நாகை பாலா 18 May 2010 02:25 am
அன்புடன் அந்தரங்கம் (வாரமலர்) பகுதியின் மூலம் நல்ல அறிவுரைகள், நல்ல கருத்துக்ககளை பதிவு செய்தவர். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Malar 18 May 2010 12:36 am
குடும்ப பிரச்சனைகளுக்கு அந்த குடும்பத்தில் ஒருவரை போல பிரச்னையை அணுகி தீர்வு சொல்வார். நல்ல உள்ளம் கொண்ட பெண்மணி.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST