12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்
கோவை: 12,000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் கோவை டைடல் பூங்காப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 2ம் தேதி இந்த பிரமாண்டமான டைடல் பூங்கா திறந்துவைக்கப்படவுள்ளது.
கோவையில், மருத்துவக் கல்லூரியின் பின்புறம், அவினாசி சாலையில் 9.5 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது கோவை டைடல் பூங்கா. தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த டைடல் பூங்கா எழும்பி வருகிறது.
இந்த இடத்தின் மேற்குப் பகுதியில் விப்ரோ நிறுவனம் அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில், டிசிஎஸ் மற்றும் எச்.சி.எல் நிறுவனங்கள் வரவுள்ளன.
அதி நவீனமான முறையில், கோவை டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் நிறைந்ததாக இந்த டைடல் பூங்காவளாகம் அமையும்.
தரைத் தளம் மற்றும் மேலே நான்கு தளங்களுடன் கூடியதாக இந்த பூங்கா உருவாகிறது.
மொத்த கட்டட தளங்களின் பரப்பளவு 9,14,000 சதுர அடியாகும். 3 பிளாக்குகளாக இது கட்டப்படுகிறது.
ஒவ்வொரு அலுவலக வளாகமும் குறைந்தது 5000 சதுர அடி முதல் உருவாக்கப்படுகிறது. அதிகபட்சம் 2 லட்சம் சதுர அடியாக இருக்கும்.
ஐடி வளாகத்தில் மாநாட்டு அறைகள், பயிற்சி அறை, புட் கோர்ட், தபால் அலுலவகம், மருந்துக் கடைகள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனம், ஏடிஎம் மையங்கள், தொலைபேசி வசதி, புத்தக மையம், டிராவல் மையங்கள், மருத்துவர் பிரிவு, ஜிம் உள்ளிட்ட சகல வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
கோவை விமான நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கோவை டைடல் பூங்கா. இங்கிருந்து கொச்சி நகரம் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ரூ. 370 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்காவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே முடித்திருக்க வேண்டும். இருப்பினும் அதில் தாமதமாகி தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.
கட்டுமானப்பணிகளை மேற்பார்வையிட்டுவரும் பூங்கா மேலாளர் சுனில் பாலி கூறுகையில்,
டைடல் பார்க் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி இதனை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அவர் வராத பட்சத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இந்த டைடல் பார்க் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்.
சென்னைக்கு அடுத்தபடியாக அமையும் தமிழகத்தின் 2வது டைடல் பூங்கா இது என்ற பெருமையை கோவை டைடல் பூங்கா பெறுகிறது.