அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க கோரும் மனு-3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்ற திட்டம்?
அயோத்தி வழக்கின் தீர்ப்பை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். காமன்வெல்த் போட்டி முடியும் வரை அதை வெளியிடக் கூடாது என்றுகோரி ரமேஷ் சந்த் திரிபாதி என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28ம் தேதி வரை அதை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டாலும் கூட அந்த உத்தரவைப் பிறப்பித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். எச்.எல்.கோகலே, தீர்ப்பை ஒத்திவைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் நீதிபதி ரவீந்திரன், இத்தனை காலமாக தீர்க்க முடியாத பிரச்சினையை இப்போது மட்டும் எப்படி பேசித் தீர்க்க முடியும் என்று கேட்டார்.
இந்த நிலையில், தற்போது இந்த அப்பீல் மனு செப்டம்பர் 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது 3 நீதிபதிகள் கொண்ட பெரிய பெஞ்ச் விசாரிக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெறும்பான்மை தீர்ப்பை எடுத்துக் கொள்ளலாம் என்பதால் இந்த யோசனை என்று கூறப்படுகிறது.
மேலும், அயோத்தி வழக்கை விசாரித்த மூன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான டி.வி. சர்மா அக்டோபர் 1ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதற்குல் தீர்ப்பு வாசிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல் வர வாய்ப்புள்ளது.
எனவே 28ம் தேதிக்குள் அப்பீல் மனு மீதான தீர்ப்பை தெரிவித்தாக வேண்டிய நிலையில் உச்சநீதிமன்றம் உள்ளது. இதற்காகவே 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு திரிபாதியின் அப்பீல் மனு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சர்மா ஓய்வு பெற்றாலும் கூட வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. தான் ஓய்வு பெறுவதற்குள் தனது தீர்ப்பை மூடி முத்திரையிட்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுத்து விட்டால் போதும். தீர்ப்பு எப்போது வாசிக்கப்படுகிறதோ அப்போது சர்மாவின் தீர்ப்பையும் வாசித்து தீர்ப்பளிக்க முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் மறு விசாரணைக்கான அவசியம் இருக்காது என்பது அவர்களது கருத்து.
இதுகுறித்து முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், அரசியல் சட்ட நிபுணர் பி.பி.ராவ் ஆகியோர் கூறுகையில்,
நீதிபதி சர்மா ஓய்வு பெறுவதற்குள், இடைக்கால தடை நீக்கப்படாவிட்டால், அவரை இந்த குறிப்பிட்ட வழக்குக்கான விசேஷ நீதிபதியாக நியமிக்க அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. தீர்ப்பு அளிக்கப்படும்வரை, அவர் அந்தப் பதவியில் நீடிக்கலாம். ஆனால், அதற்கான அவசியமே ஏற்படாது என்று கருதுகிறோம்.
அதிக நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச், 28-ந் தேதி, அப்பீல் மனுவை விசாரிக்கும் என்று கருதுகிறோம். அதன்பிறகு, 2 நாள் கால அவகாசம் இருப்பதால், நீதிபதி ஓய்வு பெறுவதற்குள் தீர்ப்பு வெளியிடப்பட்டு விடும்.
இன்னொரு வழிமுறையும் உள்ளது. நீதிபதி சர்மா, தான் ஓய்வு பெறுவதற்குள், தனது தீர்ப்பை, மூடி முத்திரையிட்ட உறைக்குள் வைத்து, தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து விடலாம். தீர்ப்பு நாளில், அந்த உறையை பிரித்து, தீர்ப்பை படித்துக் கொள்ளலாம் என்றனர்