தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் சாயம் வெளுக்கும்: ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியின் சாயம் வெளுத்துவிடும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. தமிழக பாஜக பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் அகில இந்திய அமைப்பு இணைச் செயலாளர் வி.சதீஷ், முரளிதரராவ், மாநில நிர்வாகிகள் இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,
தமிழத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று சட்டப்பேரவைக்குள் நுழைவோம். கூட்டணி குறித்து இதுவரை எங்களிடம் எந்த கட்சியும் பேசவில்லை. நாங்களும் யாருடனும் பேசவில்லை. இப்போதைக்கு கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவையில் கட்சி பலமாக உள்ளது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல இந்து மாணவர்களுக்கும் அதிகமான கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் எல்லா வகையிலும் நிர்வாகம் செயல் இழந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அதன் சாயம் வெளுத்துவிடும் என்றார்.
ராஜராஜசோழன் சமாதி-இராம கோபாலன் கோரிக்கை:
இதற்கிடையே இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவைத் தமிழக அரசு வெகுவிமரிசையாகக் கொண்டாட முன் வந்துள்ளதை இந்து முன்னணி பாராட்டுகிறது. ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி சிலைகள் குஜராத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பதை மீண்டும் தஞ்சைக்குக் கொண்டு வர எடுக்கும் முயற்சியை வரவேற்கிறோம்.
இந்த நல்ல நேரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் ராஜராஜசோழனின் சமாதியைச் சீர் செய்து, அவரது சமாதி இருக்கும் உடையாளூரில் அழகிய நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.
செஞ்சி மாநகரின் மலைக்கோட்டையில் உள்ள வெங்கட்ராமர் கோவிலின் சுவாமி சிலை தற்போது புதுச்சேரி பூங்காவில், தொடர்ந்து பூஜையில் உள்ளதால் மக்கள் ஆதரவோடு வேறு ஒரு சிலை தயாராக இருக்கிறது, அதனைக் கோவிலில் நிறுவிட தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
அதுபோல திண்டுக்கல் அபிராமி மலை மீது இருந்த அபிராமி சிலை ஆக்கிமிரப்பாளர்களின் அச்சுறுத்தலால் அகற்றப்பட்டது வரலாறு. இதனை மீண்டும் அவ்வாலயத்தில் நிறுவிட வேண்டும்.
கன்னியாகுமரி மிடலத்திலும், பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூரிலும் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்த தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.