தனியே இருந்த பெண்ணை கொலை செய்த பெயிண்டருக்கு தூக்கு தண்டனை
சென்னை: பெயிண்ட் அடிக்க வந்த வீட்டில் தனியே இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிய பெயிண்டருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது.
சென்னை முகப்பேர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி ஜெயமாலா (31).
கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இவரது வீட்டில் சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவன் பெயிண்ட் அடித்துக் கொண்டு இருந்தான்.
நாராயணன் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியே இருந்த ஜெயமாலாவை திடீரென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்துக் கொண்டு ஜெயக்குமார் தப்பிவிட்டான்.
இவனை திருமங்கலம் போலீசார் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி 1வது விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 30 ஆவணங்களும், 9 தடைய சான்றுகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயக்குமார் கொள்ளையடித்த நகை அடகு கடையில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி தீனதயாளன் இன்று தீர்ப்பளித்தார். அவர் கூறுகையில், ஜெயக்குமார் ஆதாயத்துக்காக பெண்ணை கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதும், மேலும் அவர் கொலை தொடர்பாக தவறான தகவல்களை கூறி கோர்ட்டையே ஏமாற்றியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே ஜெயமாலாவை இரக்கமின்றி கொலை செய்த ஜெயக்குமாருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.