முடங்கியது வேலைவாய்ப்பு இணையதளம்... ஆயிரக்கணக்கானோர் தவிப்பு!
சென்னை: சர்வர் கோளாறு காரணமாக வேலைவாய்ப்பு இணையதளம் செயலிழந்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணிகளும் முடங்கின.
தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் புதிய வசதி கடந்த 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக வேலைவாய்ப்பு துறை பிரத்யேக இணையதள முகவரியையும் வெளியிட்டது.
வெளியிட்ட சிறிது நேரத்திலேயே சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் பதிவு சேவை முடங்கியது. இன்றுவரை இந்த இணையதளம் இயங்கவில்லை.
இதனால், தமிழகத்தில் உள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இணையதளமும் முடக்கப்பட்டது.
எமர்ஜிஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம் புதிதாக வடிவமைத்த எம்பவர் என்ற நவீன மென்பொருளின் உதவியுடன் ஆன்லைன் முன்பதிவு வசதியை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப நிபுணர்கள் போராடி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு இணையதளம் முற்றாக செயலிழந்துள்ளதால் ஏமாற்றமடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
பதிவு புதுப்பிக்க கால நீட்டிப்பு?
தமிழகத்தில் கடந்த 2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசு சிறப்புச் சலுகையாக மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.