சத்துணவு: ரூ.74 கோடி செலவில் குழந்தைகளுக்கு கூடுதல் அரிசி, காய்கறி-கருணாநிதி உத்தரவு
சென்னை: பள்ளிகளில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு ரூ. 74.33 கோடி செலவில் கூடுதலாக அரிசி, காய்கறி, எண்ணெய் ஒதுக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சத்துணவு திட்டத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட 17.9.2010 அன்று முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காய்கறி, மசாலாப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கு, ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினம் 44 காசு என்பதை 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு 56 காசாகவும்;
ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 70 காசாகவும்; 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 80 காசாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.
ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தலா 1 கிராம் சமையல் எண்ணெயினை 3 கிராமாக உயர்த்தி வழங்கிடவும்;
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளொன்றுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் தலா 100 கிராம் அரிசியையும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தலா 120 கிராம் அரிசியையும் 150 கிராமாக உயர்த்தி வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காய்கறியினை 50 கிராமிலிருந்து 60 கிராமாக உயர்த்தப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இதனால் 11 லட்சத்து 26 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளும்; 57 லட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ- மாணவியர்களும் பயன் பெறுவர்.
அரசுக்கு ஆண்டுக்கு 74 கோடியே 33 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.