இலங்கை கடற்படைக்குக் கண்டனம்-அக். 11ல் 10,000 மீனவர்கள் கச்சத்தீவு செல்லும் போராட்டம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்து அக்டோபர் 11ம் தேதி கச்சத்தீவுக்கு செல்லும் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதில் 10 ஆயிரம் மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை காக்காய், குருவிகளைப் போல இலங்கைக் கடற்படை காடையர்கள் சுடுவது தொடர்கதையாகியுள்ளது. இதைக் கேட்க நாதியில்லை. மத்திய அரசு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுப்பதில்லை. அழுத்திக் கேட்டால், போனால் சுடத்தானே செய்வார்கள் என்று படு அலட்சியமான பதிலைத் தருகின்றனர்.
இப்படி இந்திய அரசு பெருத்த மெளனமும், அலட்சியமும் காட்டுவதால் இலங்கை கடற்படையால் சுடப்படுவதும், உயிரிழப்பதும், தாக்கப்படுவதும், சேதங்களை சந்திப்பதும் மீனவர்களுக்கு தொடர் கதையாகி விட்டது.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கொண்டனர்.
கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டித் தர வேண்டும்; எல்லை தாண்டி சென்ற 110 படகுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்; இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அக்டோபர் 11-ந் தேதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.