
டொராண்டோ: நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது பேரவைக் கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதற்கு வாழ்த்துத் தெரிவித்து இந்த அரசின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் ருத்திரகுமாரனுக்கு கனடாவிலிருந்து இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் சார்பில் அதன் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது பேரவையின் அமர்வு வெற்றிகரமாக நடந்தேற எமது கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் நாம் சந்தித்த பின்னடைவின் பின் எமது மாவீரர்களது கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஒன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அனைத்துப் புலம்பெயர் தமிழ் மக்கள் தோள்மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றவே நாடுகடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்றுள்ளது.
இந்த நாடு கடந்த தமிழீழ அரசு எப்படிப் புலத்தில் வாழும் யூதர்கள் சார்பாக பன்னாட்டு யூதப் பேரவை இயங்கி வருகிறதோ அதே போல் புலம்பெயர் தமிழர்கள் சார்பாக குரல் கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே பல அமைப்புக்கள் ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களது அரசியல் மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கு உழைத்து வருகின்றன. இந்த அமைப்புக்கள் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். எல்லா அமைப்புகளுமே ஒன்றோடு ஒன்று மோதாமல் ஒரே நேரத்தில் சமாந்திரப் பாதையில் பயணிக்கலாம்.
இந்த இடத்தில் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்ட உத்தி பற்றி லெனின் சொன்னது கவனிக்கத்தக்கது. அவர் சொன்னார்...''தனித்தனி பதாதைகளின் கீழ் அணிவகுத்து செல்லுங்கள், ஆனால் தாக்கும் போது ஒன்றாகத் தாக்குங்கள்''.
லெனின் சொன்னது எங்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசியவாதிகளது அமைப்புகள் வெவ்வேறாக இருந்தாலும் எதிரியைத் தாக்கும்போது ஒன்றாகத் தாக்க வேண்டும். அப்படித் தாக்கும் போதுதான் வெற்றி கிடைக்கும்.
ஒரு மக்களாட்சி நடைமுறையில் ஒரு கட்சிக்கு இடமில்லை. ஒத்த கருத்துக்கும் இடமில்லை. மாற்றுக் கருத்துக்கு இடமளிப்பதே மக்களாட்சியின் பலமாகும்.
எனவே நாம் வெவ்வேறு அமைப்புகளில் இருந்தாலும் எதிரியைத் தாக்கும்போது ஒன்றுபட்டுத் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.


















