கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜிநாமா இல்லை
பெங்களூர்: கர்நாடக பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யும் திட்டம் இல்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தங்களது கட்சி எம்.எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி வருவதைத் தடுக்க, அனைத்து எம்எல்ஏக்களையும் கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்க காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் திட்டமிட்டன.
இதன்மூலம் பாஜக அரசுக்கு அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்த அந்த் கட்சிகள் முடிவு செய்தன.
இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்வது குறித்து அந்தக் கூட்டத்தில் நீண்ட விவாதம் நடந்தது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான சித்தராமையா, பாஜக ஆட்சியை கவிழ்க்கும் உத்தேசம் ஏதும் எங்களுக்கு இல்லை. அதற்கான எந்த முயற்சியையும் காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை. இதற்கு காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலும் இல்லை.
அதே நேரத்தில் பாஜக மேற்கொள்ளும் ஜனநாயக விரோதச் 'ஆபரேஷன் தாமரை' திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எல்லா எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது குறித்து ஆலோசிக்க்பபட்டது.
ஆனால், ராஜினாமா வேண்டாம் என்று காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. எனவே, இனி ஒட்டுமொத்த ராஜினாமா என்ற பேச்சுக்கே இப்போது அவசியம் இல்லை.
முதல்வர் எதியூரப்பாவுக்கு ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அவரை ஆட்டிப் படைக்கிறது.
கர்நாடகத்தில் நடக்கும் வருமான வரித்துறையினரின் சோதனைகளைக் கண்டு முதல்வர் எதியூரப்பா ஏன் பயப்பட வேண்டும். மடியில் கனம் இல்லை என்றால் அவருக்குப் பயம் தேவையில்லை. ஆனால், விவேகானந்தா, பிஇஎஸ் என்ற கல்வி நிறுவனங்களை தனது குடும்பத்தினர் நடத்துவதை இப்போது முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார்.
பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சம் எதியூரப்பாவுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால், இந்தச் சோதனையை அரசியலாக்க முயற்சிக்கிறார் என்றார் சித்தராமையா.
அமைச்சர்கள் வீடுகளில் 2வது நாளாக சோதனை:
இதற்கிடையே கர்நாடக அமைச்சர்கள் ஜனார்தன ரெட்டி, அவரது சகோதரர் கருணாகர ரெட்டி உள்ளிட்ட ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் 7 பேரின் வீடுகள், அலுவலகங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டெல்லியில் இருந்து 3 குழுக்கள், சென்னையில் இருந்து 1 குழு உள்ளிட்ட 10 குழுவினர் இந்தோ-திபெத் எல்லை போலீசாரின் உதவியுடன் இந்த சோதனையை நடத்தினர்
முன்னதாக ரெட்டி சகோதரர்கள் அவர்களது ஆதரவாளர்களின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வரும் நிலையில் இந்த சோதனைகள் நடந்துள்ளன.
பெங்களூர், பெல்லாரி, ஹோஸ்பேட் ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது சகோதரரும் வருவாய்த் துறை அமைச்சருமான கருணாகர ரெட்டி, இவர்களுக்கு மிகவும் நெருக்கமான இரு பாஜக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர், உதவியாளர்கள் ஆகியோருக்குச் சொந்தமாக உள்ள நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் இந்த சோதனைகள் நடந்தன.
அதே போல ரெட்டிகளின் நெருங்கிய சகாவான சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் பெங்களூர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜனார்த்தன ரெட்டிக்குச் சொந்தமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்க நிறுவன அலுவலகம், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.
ஜனார்த்தன ரெட்டியின் வழக்கறிஞர் ராகவாச்சார்யா, அவரது உதவியாளர் அலி கான் ஆகியோரின் பெல்லாரி வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தன.
பெங்களூர் மற்றும் பெல்லாரியில் உள்ள எம்எல்ஏக்கள் நாகேந்திரா, சுரேஷ் பாபு ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், சட்டப் பேரவை உறுப்பினர் விடுதியில் உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மற்றொரு ரெட்டி சகோதரர் சோமசேகர ரெட்டிக்குச் சொந்தமான பெல்லாரி வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்தது. ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான ஜிஜி மைன்ஸ், கொக்கே, ஐஎல்சி ஆகிய சுரங்க நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.
சோதனையின்போது ஏராளமான ஆவணங்களும் கோடிக்கணக்கான பணமும் சிக்கியது. அவற்றை அதிகாரிகள் மூட்டைகளாக கட்டி எடுத்துச் சென்றனர்.
சமீபத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ ஸ்ரீநிவாசை இழுக்க பேரம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் கெளடா வீடியோவில் சிக்கினார். அவருக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசினார் கெளடா என்பது குறிப்பிடத்த்ககது.