தேவர் குரு பூஜை-30ம் தேதி ஜெயலலிதா பசும்பொன் வருகை
ராமநாதபுரம்: தேவர் குரு பூஜையையொட்டி வரும் 30ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பசும்பொன் வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி, 48வது குருபூஜை விழா வரும் 28,29,30ம் தேதிகளில் நடக்கிறது.
28ம் தேதி தேவரின் ஆன்மிக விழாவும், 29ம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது.
30ம் தேதி முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ராஜ கண்ணப்பன், அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி.கோகுலஇந்திரா உள்பட ஏராளமான அதிமுகவினர் நேற்று முன்தினம் பசும்பொன் சென்றனர்.
அங்கு ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேட் தளம் மற்றும் அங்கிருந்து தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பார்த்திபனூரில் அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. அதில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் 5,000 தொண்டர்களை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.