சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுடன் காஷ்மீர் சமரச பேச்சாளர்கள் சந்திப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் சென்றுள்ள சமரசப் பேச்சாளர்கள் குழு, சிறையில்அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை சந்தித்துப் பேசியுள்ளனர்.
பெரும் புண்ணாக மாறியுள்ள காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்துப் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களை அறியும் முயற்சியாக சமரச பேச்சாளர்கள் குழுவை அது அமைத்துள்ளது.
இந்தக் குழுவினர் தற்போது காஷ்மீர் சென்றுள்ளனர். தங்களது பயணத்தின் ஒரு பகுதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளையும், தீவிரவாத தலைவர்களையும் சந்தித்துப் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஒரு முக்கிய விஷயம் குறித்தும் பேச்சாளர்கள் ஆலோசித்தனராம். காஷ்மீர் தீர்வு குறித்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை மட்டும் சேர்க்காமல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தபடி செயல்படும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சிலையும் பேச்சுவார்த்தையில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம். இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சலாஹுதீன் செயல்படுகிறார்.
நேற்று ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர்கள் சிலரையும், லஷ்கர் இ தொய்பாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஷபீர் புகாரியையும் பேச்சாளர்கள் குழு சந்தித்தது.
இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஐக்கிய ஜிஹாத் கவுன்சிலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்குமாறு தீவிரவாதிகளுக்கு, பேச்சாளர் குழு கோரிக்கை விடுத்ததாம்.
கடந்த காலத்தில்இதுபோல பேச்சுவார்த்தைக்கு வருமாறு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவர்கள் அதை ஏற்றதில்லை.
இந்த நிலையில் மீண்டும் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகியுள்ளது.