யாருக்காக... இந்த பங்கு விற்பனை யாருக்காக?
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதாக சாக்கு சொல்லி வந்த நிதியமைச்சகம், பற்றாக்குறையைச் சரிகட்டுவதற்கும் மேலாகவே வருவாய் வந்த போதும், பங்கு விற்பனையை நிறுத்தாமல் இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பங்கு விற்பனை மூலம் ரூ 40000 கோடி ரூபாய் திரட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காரணமாக, பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைச் சுட்டிக் காட்டினார் நிதியமைச்சர்.
இதற்காக கோல் இந்தியா, ஆயில் இந்தியா உள்ளிட்ட 10 நிறுவனங்களின் பங்குளை விற்கவும் முடிவு செய்திருந்தனர்.
இவற்றில் ஆயில் இந்தியா, என்எம்டிசி, ஆர்இசி மற்றும் என்டிபிசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்றது மத்திய அரசு. இதன் மூலம் ரூ 25533 கோடியைத் திரட்டியது.
இந்த நிலையில் கோல் இந்தியா நிறுவனப் பங்கு விற்பனையை சமீபத்தில் அறிவித்தது மத்திய அரசு. ரூ 15000 கோடிக்கு மேல் இந்த பங்குகள் விலை போயின.
திட்டமிட்டபடி இலக்கை அடைந்தாலும், பங்கு விலக்கம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 7 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கப் போகிறார்களாம்.
இதில், இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஓஎன்ஜிஸி, செய்ல், பவர் கிரிட் உள்ளிட்ட லாபத்தில் இயங்கும் பெரிய நிறுவனங்களின் 20 சதவீதப் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
பிஎஸ்என்எல் பங்குகளும் 20 சதவீதம் அளவுக்கு விற்கப்பட உள்ளன.
'அந்த 1.40 லட்சம் கோடி ரூபாய் என்னாச்சு?'
பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், இதுகுறித்த எதிர்ப்புகள் எதையும் பொருட்படுத்தும் மூடிலேயே இல்லை மத்திய அரசு.
அரசு பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிக்கவே பங்கு விற்பனை செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிக்க வேறு ஆதாரங்கள் கிடைத்தும் கூட, பங்கு விற்பனை முடிவை மட்டும் மாற்றிக் கொள்வதாக இல்லை.
இந்த நிதியாண்டில் அடுத்த தலைமுறைக்கான 3 ஜி சேவை மற்றும் கம்பியில்லா சேவைகளுக்கான ஏலம் மூலம் ரூ 1.40 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்த வருவாய் அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என்றும், மேற்கொண்டு பங்கு விற்பனை செய்யவும் அவசியமிருக்காது" என்றும் அறிவித்தார்.
"கடந்த ஜூன் 9-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அடுத்த நான்கு மாதங்களுக்குள் மீண்டும் பங்குகளை விற்கிறோம் என மன்மோகன் சிங் அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்? அரசுத்துறை நிறுவனங்களை முற்றாக தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியே இது," என்று கருத்து தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்.