இலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங்கள்!
கொழும்பு: இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை ராணும். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்களை வெளியிட்டுள்ளது தமிழ்வின் இணையதளம்.புலிகளுடனான போரில், பொதுமக்களை ராணுவம் கொல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெருமளவில் போர்க்குற்றம் செய்த நாடு என பல நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.
இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது இலங்கை. ஆனாலும் தொடர்ந்து, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டே உள்ளன.
அந்த வகையில் மிக அண்மையில் சில கொடூரமான படங்கள் வெளியாகியுள்ளன. இப்படங்கள் கடந்த 2009 மே மாதம் வன்னியில் நடந்த யுத்தத்தில், சிங்களப் படைகள் தமிழர் மீது நடத்திய வெறியாட்டத்தின்போது எடுக்கப்பட்டவை.
ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு, மிகக் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மற்றும் போராளிகளைக் கொன்று உடல்களை தெருவில் வீசிவிட்டு சிங்களர்கள் செல்லும் காட்சிகள், உயிரோடு தமிழர்களை ஓடவிட்டு சுட்டுக் கொல்லும் கொடூரம் போன்றவை இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.
போர்க்குற்றம் குறித்து பொதுமக்களும் தங்களுக்குத் தெரிந்த, தங்களிடம் உள்ள ஆதாரங்களைத் தரலாம் என ஐநா நிபுணர் குழு கூறியுள்ள நிலையில் இந்த படங்கள் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இவற்றையும் ஐநா போர்க்குற்ற விசாரணை நிபுணர் குழுவுக்கு ஆதாரங்களாக அனுப்பி வைக்க முடியும்.