மழையில்லாததால் மழையின்றி பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுப் பகுதிகளில் மழை இல்லாததால் பல ஆயிரக்கணக்கான பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
கீழப்பாவூர் ஓன்றியம் திப்பணம்பட்டி, ஆவுடையனூர், அரியப்பபுரம், கல்லூரணி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பூலாங்குளம், சிவநாடானூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள பல்லாயிரம் புன் செய் நிலங்களில் அக், நவம்பரில் பெய்யும் பருவமழையால் வெள்ளப்பயிர்களான உளுந்து, சிறுபயிறு மற்றும் நாற்று சோளம் ஆகியவை பயிரிடுவது வழக்கம்.
இக்காலகட்டத்தில் பெய்யும் மழையால் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 20 நாட்களுக்கு முன் பெய்த மழையால் மேற்கண்ட பயிர்கள் பயிரிடப்பட்டன. பயிர்கள் நன்கு முளைத்த நிலையில் மழை பொய்த்து வி்ட்டது. இதனால் முளையிட்ட பயிர்கள் தண்ணீரின்றி வாடி வதங்கி வருகிறது.
பயிர்கள் நீரின்றி கருகுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஓரிருநாளில் மழை பெய்யாவிட்டால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.