பிரச்சினைக்குத் தீர்வு காண ராஜபக்சேவை சந்தித்துப் பேச மீனவர்கள் முடிவு
இத்தனை காலமாக மத்திய, மாநில அரசுகளை நம்பி இருந்து வீணாகப் போனது போதும் என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனராம்.
நேரடியாக ராஜபக்சேவையே போய் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனராம். நவம்பர் 4ம் தேதி தமிழகத்திலிருந்து மீனவர் குழு இலங்கை செல்லவுள்ளது.
இலங்கைக் கடற்படையினராலும், இலங்கை மீனவர்களாலும் தமிழக மீனவர்களின் மீன் பிடித் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தொடர் தாக்குதல்கள், உயிரிழப்புகள் என பெரும் நஷ்டத்தையும், இழப்பையும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்ரனர்.
பாரம்பரியமாக கச்சத் தீவு மற்றும் இலங்கைப் பகுதியில் மீன் பிடித்து வந்த ராமேஸ்வரம் தீவு மீனவர்களை மீன் பிடிக்க விடாமல், இலங்கைக் கடற்படையினர் தாக்கி வருகின்றனர்.
இந்த துயரம் காரணமாக கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் போகாமல் உள்ளனர். இதனால் மீனவர் குடும்பங்கள் வறுமையில் உழன்று கொண்டுள்ளன.
ஆனால் இதுகுறித்து மத்திய அரசோ, மாநில அரசோ எதையும் செய்யாமல் வழக்கம் போல அமைதியாக உள்ளன.
இந்த நிலையில், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பதற்கேற்ப நேரடியாக இலங்கைக்கே போய் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தி விட தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் சேசு கூறுகையில், ராமேஸ்வரம் தீவு, மண்டபம் மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் சுமூகமாக மீன் பிடிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்த நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில் என்னுடன் ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர்கள் 5 பேர் வருகின்றனர்.
நவம்பர் 4-ம் தேதி இலங்கை செல்ல உள்ளோம். இந்த சந்திப்பின்போது பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வோம் என்றார்.