காவரியில் பெருகி வரும் வெள்ளம்-வெறிச்சோடிய ஓகனேக்கல்
ஓகனேக்கல்: கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தமிழகத்தின் ஓகனேக்கல் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓகனேக்கலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் ஓகனேக்கலே வெறிச்சோடிக் கிடக்கிறது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகளிலிருந்து உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
இந்த உபரி நீர் தற்போது தமிழகத்திற்குள் நுழைத்து மேட்டூரை வந்தடைந்துள்ளது. இதன் காரணமாக ஓகனேக்கல் அருவிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அடியோடு குறைந்து விட்டது. ஓகனேக்கல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் ஓகனேக்கலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள். ஆனால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நேற்றும் சரி, இன்றும் சரி சுற்றுலாப் பயணிகள் வருகை நின்று போயிருந்தது.
மேட்டூர் நீர்மட்டம் உயர்வு
இதற்கிடையே, மேட்டூருக்கு பெருமளவில் நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவை நோக்கி நகர்ந்த காற்றழுத்தம்
இதற்கிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என்றும் அதுதெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை இன்று காலையில் லேசான வெயில் அடித்தது. பிற்பகலுக்கு மேல் வானம் மேமூட்டமாக காணப்படுகிறது.