கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை-ரயில்வே ஊழியர்கள் 2 பேர் கைது
நெல்லை: நெல்லையில் கூடுதல் விலைக்கு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை விற்க முயன்ற ரயில்வே ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை நவ 5ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு ரயில், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் ரயில், பஸ்களில் டிக்கெட்டுகள் காலியாகி விட்டன. இதையடுத்து தட்கல் டிக்கெட்டுகளை பெற மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் காலியாகி விடுகிறது.
முன்பதிவு டிக்கெட் மையங்களில் புரோக்கர்கள் முதல் நபராக இடம் பிடித்து போலி முகவரி, பெயர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். இதன் காரணமாக வரிசையில் காத்திருக்கும் பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
ரயில் டிக்கெட்டுகளை ஏற்பட்டுள்ள கிராக்கியை பயன்படுத்தி கள்ள மார்க்கெட்டில் டிக்கெட்டுகளை புரோக்கர்கள் கூடுதல் விலைக்கு சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு பல தரப்பி்ல் இருந்தும் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து நெல்லை ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 ஊழியர்கள் வரிசையில் காத்திருந்து தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது இருவரும் நெல்லை ரயில் நிலையத்தில் பாயிண்ட் மேன், லோகோ செட் பிரிவில் பணியாற்றி வரும் பீட்டர், ஜூவா என்பதும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக நெல்லையில் இருந்து சென்னைக்கு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலீசார் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது போலீஸ் பிடியில் இருந்து பீட்டர் தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் வாக்கி டாக்கியில் டிக்கெட் கவுண்டரில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் துரத்தி சென்று பீட்டரை மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.