அப்போலோ டயர்ஸ் துணை புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஸ்டாலின் முன் கையெழுத்தானது
சென்னை: அப்போலோ டயர்ஸ் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே இன்று (11.1.2011) துணை புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னைக்கு அருகே ஒரகடத்தில் இருக்கும் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ரேடியல் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதற்காக 5 ஆண்டுகளில் ரூ. 450 கோடி முதலீடு செய்யவுள்ளது.
இந்த திட்டதிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், அப்போலோ டய்ரஸ் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி கையெழுத்தானது. இதற்கு அரசும் தொகுப்புச் சலுகை அளித்துள்ளது.
தமிழக அரசு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உருதுணையாக இருக்கிறது. அரசின் ஊக்கத்தையும், உற்பத்திப் பொருளுக்கான தேவையையும் கருத்தில் கொ்ண்டு அந்நிறுவனம் ரூ. 2100 கோடி முதலீட்டில் சரக்கு வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கான ரேடியல் டயர் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 6000 ஆகவும், பயணிகள் சீருந்துக்கான ரேடியல் டயர் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 8000 ஆகவும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 1100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், 900 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு குறித்து அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் பொறுப்புறுதிகள் மற்றும் அரசின் திருத்திய ஊக்கச் சலுகைகள் அடங்கிய துணை புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11.1.2011) புதிய தலைமைச் செயலக வளாகத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
அப்போது தமிழக அரசின் சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் திட்டத் தலைவர் கே.பிரபாகர் துணை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.