108 ஆம்புலன்ஸ் திட்டம்-கூடுதலாக 260 ஆம்புலன்ஸ்கள் சேர்ப்பு-அழைத்த 5 நிமிடத்தில் வரும்
தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இத்தகவலைத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமன் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பன்னீர் செல்வம் பதிலளிக்கையில், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும், 108 சேவையை அழைப்போருக்கு அந்த சேவையில் எந்தத் தடங்கலும் இல்லாமல் அது போய்ச் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் மேலும் கூடுதலாக 260 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்படவுள்ளது. மேலும் அழைப்பு வந்த 5 நிமிடத்தில் அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் போய்ச்சேரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 108 சேவையின் கீழ் 350 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஒரு அழைப்பு வந்த 15 நிமிடத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆம்புலன்ஸ்கள் சென்றடைகின்றன. இதை 5 நிமிடமாக தற்போது குறைக்கவுள்ளோம். இதற்காகவே கூடுதலாக 260 ஆம்புலன்ஸ்களை சேர்க்கவுள்ளோம் என்றார்.
இஎம்ஆர்ஐ எனப்படும் அவசரகால நிர்வாகம் மற்றும் ஆய்வுக் கழகத்துடன் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் கீழ் இந்த 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இதுவரை இந்த ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் 7 லட்சம் பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான சேவையைப் பெற்றவர்கள் 2.26 லட்சம் பேர். கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 2.02 லட்சம். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 42,117. விஷம் குடித்து உயிருக்குப் போராடி உதவி பெற்றவர்கள் 30,584. இது போக 3000க்கும் மேற்பட்ட தற்கொலை முயர்சியில் ஈடுபட்டவர்களும் இதில் உள்ளனர்.