சொத்து குவிப்பு வழக்கு-நயினார் நாகேந்திரன் உள்பட 6 பேர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்
நெல்லை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 6 பேர் நெல்லை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடு, ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 275 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன், அவரது மனைவி சந்திரா, மைத்துனர்கள் சுப்பிரமணியன், நடராஜன், வள்ளிகண்ணு, நவராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது நெல்லை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த வாரம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரத்து 97 ரூபாய்க்கு நிலம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
145 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் 168 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா உள்பட 6 பேர் ஜனவரி 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜாராகினர். வழக்கை விசாரித்த உமா மகேஸ்வரி விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.