உ.பி. சிறுமியை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. கற்பழித்தது உண்மையே-போலீஸ்
லக்னோ: உ.பி. மாநிலம் பந்தா பகுதியைச் சேர்ந்த சிறுமியை பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ புருஷோத்தம் நரேஷ் திவிவேதி கற்பழித்தது உண்மைதான் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுமியின் வயது 17. சமீபத்தில் இந்த சிறுமியைக் கற்பழித்தார் திவிவேதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதிரடியாக அந்த சிறுமி மீது திருட்டுப் பட்டம் கட்டி போலீஸில் புகார் செய்து கைது செய்யவும் வைத்து விட்டார் திவிவேதி. இது உ.பியில் பெரும் புயலைக் கிளப்பியது.
இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு அனுப்பினார் முதல்வர் மாயாவதி. மேலும், திவிவேதியும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தற்போது சிறுமியை திவிவேதி கற்பழித்தது உண்மைதான் என்று சிபிசிஐடி போலீஸ் விசாரணை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. தொடக்க கட்ட விசாரணையின்படி குற்றம் நடந்தது உண்மை என்று தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த தொடக்க கட்ட விசாரணை அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்படும்.
மேலும், சிறுமி மீது எம்.எல்.ஏ கொடுத்த திருட்டுப் புகாரும் பொய்யானது என்றும் தெரிய வந்துள்ளது.
இதுவரை 12க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம் என்றார்.
முன்னதாக கோர்ட்டில் ஆஜரான சிறுமி நீதிபதி ரவிக்குமார் குப்தாவிடம், தன்னை திவிவேதி 2 முறை கட்டாயப்படுத்திக் கற்பழித்தார். அவருடன் இருந்த கூட்டாளிகள் சிலரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்தே போலீஸ் விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதற்குள் சிறுமி மீது திருட்டுப் புகார் கூறி அவரை பந்தா போலீஸ் நிலையம் மூலமாக கைது செய்ய வைத்து சிறைக்கு அனுப்பி விட்டார் திவிவேதி.
இதன் மூலம் பந்தா போலீஸாரும், திவிவேதிக்கு உடந்தையாக இருந்தது அம்பலமானது. இதையடுத்தே சிபிசிஐடி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவிட்டது.