இனி விண்ணப்பித்த உடன் பள்ளிகளுக்கு அங்கீகாரம்
நெல்லை: தமிழகம் முழுவதும் நேரடி முகாம் நடத்தி தொடர் அங்கீகாரம் கோரும் தகுதியுள்ள பள்ளிகளுக்கு அதே இடத்தில் உத்தரவுகள் வழங்கி வருவதாக பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தர்ம ராஜேந்திரன் தெரிவித்தார்.
நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று பாளை ஜெயந்திர மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
பள்ளி கல்விதுறை (இடைநிலை கல்வி) இணை இயக்குனர் தர்ம ராஜேந்திரன் தொடர் அங்கீகாரம் கோரி பள்ளிகள் சார்பில் அளித்த 136 மனுக்களை விசாரித்து தகுதியுள்ள பள்ளிகளுக்கு அதே இடத்திலேயே அங்கீகார உத்தரவுகளை வழங்கினார்.
பி்ன்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்தால் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பரீசிலனை, பின்னர் தலைமை அலுவலகங்களில் பரீசிலனை என உத்தரவு பெற தாமதமாகிறது. எனவே தாமதத்தை தவிர்க்கவும், முறைகேடுகளை தவிர்க்கவும், வெளிப்படையான நிர்வாகம் அமையவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மனுக்கள் பெற்று உடனுக்குடன் அங்கீகார உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே 8 மாவட்டங்களை ஒருங்கிணைந்து மதுரையிலும், தற்போது நெல்லையிலும் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.