புவனேஸ்வரில் 2 இளைஞர்களை காயப்படுத்திய சிறுத்தையை அடித்தே கொன்ற கிராமத்தினர்
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து 2 பேரை காயப்படுத்திய அரிய வகை சிறுத்தைப் புலியை கிராம மக்கள் அடித்தே கொன்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஜே.கே. தாஸ் கூறியதாவது,
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 இளைஞர்களை சிறுத்தைப் புலி காயப்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கந்தர்புர் கிராம மக்கள் அதை கம்பு, கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்றனர்.
நந்தன்கனன் விலங்கியல் பூங்கா அருகே உள்ள புதரில் இன்று காலை இந்த அரிய வகை சிறுத்தைப் புலியை சில இளைஞர்கள் பார்த்துள்ளனர். அதில் 2 இளைஞர்களை அது தாக்கியதும் கிராமத்தினர் ஆத்திரம் அடைந்துவிட்டனர்.
உடனே அவர்கள் கட்டைகள், கிரிக்கெட் பேட்கள், ஹாக்கி ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுடன் வந்து அதை சுற்றிவளைத்து சாகும் வரை அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை கேபிடல் மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறையினரோ, மயக்க ஊசி போடுபவர்களோ வருவதற்குள் மக்கள் அதை கொன்றுவிட்டனர் என்றார்.
சிறுத்தைப் புலியைக் கொன்ற பிறகு காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வரை அதன் உடலைத் தர மாட்டோம் என்று கிராமத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் வந்து உடலை வாங்கிச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது.
அருகில் உள்ள சந்தகா வனத்தில் இருந்து தான் இந்த சிறுத்தைப் புலி வந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.