For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திட்டமிட்டு எரிக்கப்பட்டது-தனி கோர்ட் தீர்ப்பு

Google Oneindia Tamil News

Godra
அகமதாபாத்: கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது திட்டமிட்ட சதிச் செயல் என்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி ஆர்.ஆர்.பாட்டீல் தீர்ப்பளித்தார். மற்ற 63 பேருக்கு எதிராக ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை என்று கூறி அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். விடுதலையானவர்களில் முக்கியமானவர் மெளலவி உமர்ஜி என்பவர் ஆவார். இவரை முக்கியக் குற்றவாளியாக குஜராத் அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுப் படை எப்ஐஆரில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்னரே குஜராத்தில் வரலாறு காணாத கலவரம் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டது. அதில் 2000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாட்டீல், ரயில் எரிப்பு சம்பவம் தற் செயலாக நடந்ததல்ல. இது திட்டமிட்ட சதி என்று எஸ்ஐடி கூறியுள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கரசேவகர்கள் பயணம் செய்த குறிப்பிட்ட (எஸ்-6) ரயில் பெட்டிக்கு மட்டும் தீ வைக்கப்பட்டதில் சதி வேலை இருப்பதாகக் கூறப்பட்டதை ஏற்பதாகவும், முக்கியக் குற்றவாளியான உமர்ஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுகிறார். அதேசமயம், பிற முக்கியக் குற்றவாளிகளான ஹாஜி பில்லா, ரஜாக் குர்குர் ஆகியோரை குற்றவாளிகளாக அறிவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், சந்தர்ப்ப சூழலின்படி கிடைத்த ஆவணங்கள் ஆகியன முக்கிய ஆவணங்களாக ஏற்று அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

பாஜக வரவேற்பு:

தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த அளவுக்கு ஒரு சார்பாக இந்த வழக்கை மூடி மறைக்கப் பார்த்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. சட்டம் தனது கடமையை நிச்சயம் செய்யும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது என்றார்.

அக்கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான தருண் விஜய் கூறுகையில்,

லாலு பிரசாத் நியமித்த பானர்ஜி குழு இந்த சதி வேலையை முழுக்க முழுக்க விபத்து என்று சுட்டிக் காட்டியது. ஆனால் மதச்சார்பற்ற கட்சி என்ற போர்வையில் ஒரு தரப்புக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும், லாலு பிரசாத் யாதவும் செயல்பட்டது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றார்.

கருத்துக் கூற காங். மறுப்பு:

தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. தீர்ப்பைப் படித்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும். அதேசமயம், கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் மதக் கலவரத்தைத் தூண்டி ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பறித்தது நரேந்திர மோடி அரசு என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. அந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீது படிந்த கறை. அதை அகற்ற முடியாது.

அரசியல் ரீதியாக, கோத்ரா வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதன் பிறகு நடந்த மதக் கலவரத்தையும், ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளையும் யாரும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு நரேந்திர மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.

அப்பீல் செய்ய வழியுள்ளது-மொய்லி:

காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், ஒரு சட்ட அமைச்சராக இதுகுறித்து என்னால் கருத்துக் கூற முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும். தீர்ப்பின் முழு விவரம் வெளியாகவில்லை. அதை பார்த்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும். இருப்பினும் இது இறுதித் தீர்ப்பல்ல, அப்பீல் செய்ய வழியுள்ளது என்றார் அவர்.

English summary
The spl court which pronounced the judgement in the Godhra train burning case has accepted the theory of conspiracy behind the burning of coach S6 of Sabarmati express carrying Kar sevaks from Ayodhya. The court convicted 31 including prominent accused Haji Billa and Rajjak Kurkur and acquitted 63 including the prime accused Maulana Umarji yesterday. BJP has welcomed the verdict, but the Congress party has refused to comment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X