முன்னேற்றப் பாதையில் அணிவகுத்து செல்வோம்-பெண்களுக்கு ஜெ. அழைப்பு

திங்கள்கிழமை, மார்ச் 7, 2011, 14:31 [IST]
Jaya International Women Day Wishes Aid0091
சென்னை: சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மகளிர் தின நாளில், பல நூற்றாண்டுகளாக திணிக்கப்பட்டுள்ள பாலினப் பாகுபாடு என்கிற அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, விடுதலை மற்றும் அதிகாரமளிக்கக்கூடிய புதிய பாதையில் பெண்கள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று இந்தியப் பெண்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக கொண்டாடப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரையில், சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் கடினமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு, தாங்க முடியாத வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களுக்கு கல்வி இன்னமும் மறுக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை இன்னமும் உள்ளது . சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உறுதிபடுத்தப்பட்டாலும், சமுதாயத்தில் உள்ள பாலின சமத்துவம் என்பது இன்னமும் கானல் நீராகவே உள்ளது. பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு நிதி சுதந்திரம் என்பது தெரியாத ஒன்றாக உள்ளது.

இந்திய சமூகத்தில் குற்றம், இகழ்ச்சி, சித்திரவதை, அபகரிப்பு போன்ற கொடுமைகளினால் இன்றளவும் அதிக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் தான். எதிர்காலத்தில் பெண்மைக்கே கடும் அபாயத்தை விளைவிக்கும் வகையில், பெண் கருக்கலைப்பு, பெண் சிசுவதை போன்ற கொடூரமான செயல்கள் இன்றளவும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிகழக்கூடிய அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

ஆனால், அனைத்தையும் இழந்துவிடவில்லை. கருத்தாழமிக்க, சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல தரப்பட்ட பெண்கள் அண்மையில் வகுத்த பாதைகள் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளன. பல நூற்றாண்டு காலமாக பாலின அடிப்படையில் சுமத்தப்பட்ட அடக்குமுறை, கொடுமை ஆகியவற்றை தகர்த்தெறிந்து புதிய பாதையில், முற்போக்கான சமூக-அரசியல் மற்றும் நிதி அதிகாரத்தை, உரிமையை பெறுவதற்கான புதிய காலகட்டத்தை எதிர்நோக்கி பெண்கள் செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்.

பல்வேறுபட்ட தரப்பினர் அதிக கவனத்துடன் கேட்கும் அளவுக்கு இந்தியப் பெண்களின் குரல் உயர்ந்துள்ளது. பல்வேறு தொழில்களில் பெண்களின் பிரதிநித்துவம், பங்களிப்பு அதிகமாக காணப்படுகிறது. இன்று இந்தியப் பெண்கள் மாற்றத்தின் விளிம்பில் உள்ளனர்.

சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில், பல நூற்றாண்டுகளாக திணிக்கப்பட்டுள்ள பாலினப் பாகுபாடு என்கிற அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, விடுதலை மற்றும் அதிகாரமளிக்கக்கூடிய புதிய பாதையில் பெண்கள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று இந்தியப் பெண்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

வாருங்கள்! நாம் அனைவரும் ஒருசேர இணைந்து முன்னேற்றப் பாதையில் அணிவகுத்து செல்வோம்! அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற நாம் போராடுவோம்! நம்மை நாமே வலுப்படுத்திக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு பெற நமக்கு நாமே பாடுபட்டு அதன் மூலம் வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என்று அவர் கூறியுள்ளார்.
Posted by:
English summary
ADMK supremo Jayalalitha has greeted women on International women's day. In a statement she has asked the women of this country to come forward to walk in progressive path.
User Comments
sharan 08 Mar 2011 06:56 pm
முன்னேற்றப் பாதையில் அணிவகுத்து vanthaa amma kodanadu paathaila poyeduvanga
கணேஷ் m sc 08 Mar 2011 05:05 pm
சத்தியமங்கலத்தின் அரசியல் சக்கரவர்த்தி கணேஷ் தேர்தலில் போட்டியிட முடிவு . பணபலம் மிக்க கணேஷ் தேர்தல் வாககுரிதியாக வீட்டுக்கு ஒரு வாஷிங்மசின் வழங்குவதாக அறிவிப்பு.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST