காஷ்மீரில் 4 வீரர்களை வெறித்தனமாக சுட்டுக் கொன்ற ஜவான்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இராணுவ ஜவான் ஒருவர் கண்மூடித்தனமாக தனது உயர் அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்றார்.
ஸ்ரீநகரில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பன்ஸ்காம்
முகாமில் தான் இந்த வெறிச்செயல் நடந்துள்ளது. இன்று காலை 6 மணி அளவில் ராணுவ ஜவான் ஒருவர் வெறித்தனமாக தனது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அவரிடம் இருந்து ஆயுதத்தை வாங்குவதற்குள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ஜவான் காயம் அடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து உண்மை அறிய இராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டு முதல் இதுபோன்று பல சம்பவங்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது.
மன அழுத்தத்தினால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலைகளில் இருந்தல், குடும்பத்தாரை பிரிந்து இருத்தல் மற்றும் பொழுதுபோக்கே இல்லாமல் இருத்தல் தான் பாதுகாப்புப்படை வீரர்களை இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ராணுவ அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ராணுவ வீரர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகள் செய்து கொடுத்தல், குடும்பத்தாரைப் பார்க்க அடிக்கடி விடுமுறை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.