மும்பையில் தாவூத் இப்ராகிம் தம்பி மீது துப்பாக்கி சூடு: மெய்க்காப்பாளர் பலி
சர்வதேச பயங்கரவாதியும், மும்பை நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் (53). அவர் வீட்டு வாசலில் தனது மெக்காப்பாளர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கஸ்கரை நோக்கிச் சுட்டனர். இதில் கஸ்கர் தப்பிவிட்டார், ஆனால் அவரது மெய்க்காப்பாளர் ஆரிப் சையது அபு புகா மீது 6 குண்டு பாய்ந்தது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இன்னொரு தாதாவான சோட்டா ராஜன் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாவூதும், ராஜனும் எதிரிகள் என்பதால் உடனே அவன் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கஸ்கருக்கு நிறைய பேருடன் பிரச்சனை இருப்பதால் இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக இன்னொரு அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பேரில் இருவர் தப்பிவிட்டனர், மும்ப்ரா பகுதியைச் சேரந்த சையது அலி (29) மற்றும் நேபாளைச் சேர்ந்த இந்திரா கத்ரி (27) ஆகியோரை ஜே ஜே மருத்துவமனை அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இக்பால் கஸ்கர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே இல்லை என்று தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.