லோக்பால் குழுவில் தமிழக பிரதிநிதியை சேர்க்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: ஊழலை எதிர்த்து அமைக்கப்பட்டிருக்கும் லோக்பால் சட்ட மசோதா வரைவு குழுவில் தமிழக பிரநிதி ஒருவரையும் சேர்த்துக்கொள்ளக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கே.ஆர். ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
நான் ஒரு சமூகசேவகன். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில், ஊழலை கட்டுப்படுத்த லோக்பால் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த மசோதாவை தயாரிக்க மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமையில் வரைவுக்குழு அமைக்ப்பட்டுள்ளது.
இந்த குழுவில் தென் மாநிலப் பிரதிநிதிகள், குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி கூட இடம் பெறவில்லை. இந்த குழுவில் சீரான பிரதிநிதித்துவம் இல்லை.
ஊழல் முறைகேடுகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உள்ளது. உலக அளவில் ஊழல் நடவடிக்கைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமே 2ஜி ஸ்பெக்ட்ரம் தான். இந்த ஊழல்களில் தமிழக அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு.
இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதினேன். அதில் லோக்பால் வரைவு குழுவில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதிநிதியைச் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.