குழப்பம் எதிரொலி-அதிகம் தேடப்படும் நபர்கள் பட்டியலை இணையதளத்திலிருந்து நீக்கியது சிபிஐ
டெல்லி: அடுத்தடுத்து இரண்டு முறை குழப்பம் ஏற்பட்டு விட்டதால், தனது இணையதளத்தில் இணைத்திருந்த அதிகம் தேடப்படுவோர் பட்டியலை நீக்கி விட்டது சிபிஐ.
ஜாமீனில் விடுதலையாகி, குடும்பத்துடன் மும்பையிலேயே வசித்து வரும் நபரையும், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபரையும் அதிகம் தேடப்படுவோர் பட்டியலில் இணைத்து பாகிஸ்தானிடம் கொடுத்து பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது சிபிஐ.
இதனால் பாஜகவின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தனது இணையதளத்தில் வைத்திருந்த அதிகம் தேடப்படும் நபர்கள் பட்டியலையே நீக்கி விட்டது சிபிஐ.
இந்தக் குழப்பம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் கூறியுள்ளார்.
பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 பேர் குறித்தும் உள்ளூர் போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் மூலம் தீவிரமாக விசாரித்து, பரிசீலித்த பின்னர் இந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் தேடப்படும் நபர்கள்தானா என்பது உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இத்தனை குழப்பம் நடந்தாலும் கூட, பாகிஸ்தானிடம் கொடுத்த 50 பேர் கொண்ட பட்டியலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை என்று உள்துறை அமைச்சகத்தின், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் யு.கே.பன்சால் கூறுகையில், முழுப் பட்டியலும் மறு பரிசீலனை செய்யப்படும். பாகிஸ்தானிடம் கொடுத்த பட்டியலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை என்றார்.