வால்பாறையில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமி குடும்பத்துக்கு ஜெ. ரூ.2.5 லட்சம் நிதி
சென்னை: வால்பாறையில் சிறுத்தை தாக்கி உயிர் இழந்த சிறுமி ஜனனியின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 2. 5 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
வால்பாறையைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மூன்று வயது மகள் ஜனனி. நேற்று, வால்பாறையிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள தாய்முடி எஸ்டேட்டில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு குடும்பத்துடன் விருந்திற்குச் சென்றார்.
இரவு 7 மணி அளவில் விருந்து முடிந்து ஜெகமூடி எஸ்டேட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்கு சக்திவேல், அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் இன்னொரு மகள் ஆகியோர் தேயிலை தோட்டம் வழியாகச் சென்றுள்ளனர்.
அப்போது தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை, சிறுமி ஜனனியை குறிவைத்து பாய்ந்தது. சிறுத்தை சிறுமியின் கழுத்தை கவ்விக்கொண்டு, புதருக்குள் ஓட முற்பட்டது. சிறுமியின் தாயார் உதவி கேட்டு போட்ட கூச்சலில் சிறுத்தை சிறுமியை போட்டுவிட்டு ஓடிவிட்டது.
சிறுத்தையால் கடிபட்ட சிறுமி ஜனனி, சம்பவ இடத்திலேயே தாயின் கண்ணெதிரில் துடிதுடித்து இறந்தார். இந்நிலையில் இறந்த ஜனனியின் குடும்பத்துக்கு ரூ. 2. 5 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வால்பாறையில் தாய் முடி என்னும் இடத்தில் சிறுத்தைப் புலி தாக்கி சக்திவேல் என்பவருடைய 3 வயது மகள் ஜனனி கடந்த 18-ம் தேதி உயிர் இழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் துயருற்றேன்.
குழந்தையை இழந்து தவிக்கும் சக்திவேல் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்துக்கு வனத்துறை மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மேலும் ஒரு லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.