கோவையில் போலீசாக நடித்து 1 கிலோ தங்கத்தை திருடிய கொள்ளையர்கள்
கோவை: போலீஸ் போல நடித்து நகைப்பட்டறை ஊழியர்களைத் தாக்கி 1 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
நகைப்பட்டறை
கோவை வைசியாள் வீதி முழுவதும் ஏராளமான நகைப்பட்டறைகள் உள்ளன. அந்த வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் நகை பட்டறை நடத்தி வருபவர் திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. சம்பவத்தன்று இரவு பட்டறையில் கிருஷ்ணமூர்த்தியின் தம்பி தினேஷ்குமார் உள்ளிட்ட ஊழியர்கள் 6 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
போலீஸ்
நேற்று அதிகாலை 4.45 மணியளவில் அறையின் கதவு தட்டப்பட்டுள்ளது. 'போலீஸ் வந்திருக்கிறோம், கதவை திறங்கடா" என மிரட்டும் தொனியில் குரல் கேட்டது. பயந்துபோன ஊழியர்கள் கதவை திறந்தனர். போலீசார் அணியும் ஷூ, போலீசாரைப் போலவே அட்டாக் கட்டிங் சிகை அலங்காரம் ஆகியவை வந்தவர்கள் மஃப்டி போலீசார் என நம்பும்படி இருந்தது. வந்தவர்கள் தங்களை சென்னை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
கொள்ளை
பின்னர், “கிருஷ்ணமூர்த்தி எங்கே?; கொள்ளையடித்த நகைகளை எங்கே ஒளித்து வைத்துள்ளீர்கள்?" என கேட்டவாறே ஊழியர்களை கடுமையாகத் தாக்கினர். தினேஷ்குமார் மற்றும் ஊழியர்களை ஒரு அறையில் தள்ளி கட்டிப்போட்டனர். பின்னர், அங்கிருந்த நகைகள் மற்றும் நகை செய்வதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை எடுத்து ஒரு பையில் போட்டனர். இதனால் நகைக்கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் சுதாரிப்பதற்குள் நகைகளை அள்ளிய நால்வரும் தப்பி ஓடிவிட்டனர். கட்டுகளை அவிழ்த்து வெளியே வந்த தினேஷ்குமார், கடைவீதி போலீசில் புகார் செய்தார். இந்த கொள்ளையில் சுமார் 1 கிலோ தங்கம் கொள்ளை போனது.
விசாரணை
இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த பட்டறைக்கு மிக அருகேதான் கடைவீதி காவல் நிலையம் உள்ளது. கொள்ளையரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தெரிவிக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால், அவர்களுள் எவருக்கேனும் கொள்ளையில் தொடர்பு உள்ளதாஎனும் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை கோவை போலீஸ் உயர் அதிகாரிகள் பலரும் நேரில் பார்வையிட்டனர்.