ஆட்சி மாற்றம் எதிரொலி: மதுரை, திருவாரூரில் ஒரே இரவில் பலர் கைது, 531 வழக்குகள் பதிவு
மதுரை: மத்திய அமைச்சர் அழகிரியின் கோட்டையான மதுரையிலும், கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலும் போலீசார் அதிரடியாக பல குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கை சீராக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் அறிவித்தவாறே பல இடங்களில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கோட்டையான மதுரையில் பழைய குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், வாரண்டு காலாவதியான குற்றவாளிகள், ரவுடிகள், புரோக்கர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரிலும் பழைய குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், வாரண்டு காலாவதியான குற்றவாளிகள், ரவுடிகள், புரோக்கர்கள் என நேற்று இரவு மட்டும் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.